Thursday, September 08, 2005

மூன்று வரிகளில் ஒரு காட்சி

ஹைகூவிற்கு (haiku) அதிக அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். தமிழில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ஹைகூ எழுதப்படுவதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால் ஹைகூவை விட ஹைகூ என்ற பெயரில் வரும் ஹைகூ அல்லாத கவிதைகள் (பொய்கூ) தான் இங்கு அதிகம். அதைத்தான் “ஹைகூ என்பது மூன்று வரிப் பாவச்செயல்” என்று சுஜாதா ஒருமுறை கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஹைகூவிற்குப் போகும் முன் அதைப்பற்றி ஒரு சில வரிகளில் அறிமுகம்..

ஒரு காட்சியை (அல்லது நிகழ்வை) உவமை, உருவகம் போன்ற பொய்கள் இல்லாமல் நேரடியாக 12 அசைகளில் (5 – 7 – 5) எழுதும் ஜப்பானிய கவிதை வடிவம்.
இது பல மொழிகளில் அங்கீகரிக்கப்பட்டு பல மாற்றங்களை அடைந்துவிட்டது, இதன் விதிகள் தமிழில் இவ்வளவு கடுமையாகப் பின்பற்றப்படுவது இல்லை.

நான் சமீபத்தில் நெட்டில் படித்த ஆங்கில ஹைகூ ஒன்று

this small life
the beating of its heart
against my palm

தமிழ்ப்படுத்தினால்

எத்தனை சிறிய உயிர்
அதன் இதயத் துடிப்பு
என் உள்ளங்கைமீது

ஹைகூ என்பது மனம் என்னும் தெளிந்த நீர்ப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் என்று யாரோ குறிப்பிட்டிருந்தார்கள். கல் சிறியதுதான் ஆனால் அது மனதில் ஏற்படுத்தும் சலனங்களைப் பொறுத்துதான் அது நல்ல கவிதையா என்று தீர்மானிக்கப்படுகிறது.

மேலுள்ள ஹைகூவைப் படிக்கும் போது நம் உள்ளங்கையில் ஒரு சிறிய தவளையின் இதயம் துடிப்பதை உணரமுடிகிறது. அப்படித் துல்லியமாக கவிஞனின் அனுபவத்தை வாசகனுக்குக் கடத்தும் போதுதான் ஒரு ஹைகூ வெற்றியடைகிறது.

எனது ஹைகூ முயற்சியை கீழே கொடுத்திருக்கிறேன். இது 5-7-5 என்ற இலக்கணத்துக்குள் இருப்பதை கவனிக்க.

என் பைக் விளக்கின்
வட்ட வெளிச்சத்துக்குள்
அடர்ந்த மழை

1 comment:

Ram.K said...

Good examples.